சென்னை விமான நிலைய குப்பை தொட்டியில் ரூ.75 லட்சம் தங்கம் கண்டெடுப்பு

தங்கத்தை கடத்திய நபர் குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை விமான நிலைய குப்பை தொட்டியில் ரூ.75 லட்சம் தங்கம் கண்டெடுப்பு
Published on

சென்னை,

சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக அதிகளவு கடத்தல் தங்கம் பிடிபட்டு வருகிறது. இதன் காரணமாக, விமான நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய குப்பை தொட்டியில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து விமான நிலைய ஊழியர்கள் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து குப்பை தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட தங்க நகைகளை கைப்பற்றினர்.

குப்பை தொட்டியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட தங்க நகைகளின் எடை சுமார் 1.2 கிலோ என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தங்கம் கடத்தி வந்த நபர் யார்? எந்த விமானத்தில் வந்தார்? என்பது குறித்து விமான நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை சுங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அந்த நபர் சி.சி.டி.வி.யை பார்க்காதபடி நகையை குப்பை தொட்டியில் போட்டு செல்வது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com