அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.26.5 லட்சம் மோசடி - அச்சக ஊழியர் கைது

மோசடி செய்த பணத்தில் தாவீத் ராஜா பல்லாவரத்தில் நிலம் வாங்கியிருந்தது தெரிய வந்தது.
மோசடி
கோப்புப்படம்
Published on

சென்னை,

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.26.5 லட்சம் மோசடி செய்த அரசு அச்சக ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

அரசு வேலை

சென்னை கொடுங்கையூர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் முரளி (39 வயது). இவர், தொழிலாளர் நலத்துறையில் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்திருந்தார். இதை அறிந்த தமிழ்நாடு அரசு அச்சகத்தில் பணிபுரியும் தாவீத் ராஜா (34 வயது) என்பவர், முரளியை தொடர்புகொண்டு, தனக்கும், நிதித்துறையில் பணிபுரியும் தனது தாயாருக்கும் பல அரசு அதிகாரிகளை தெரியும் என்றும், பலருக்கு அரசு வேலை வாங்கிக் கொடுத்துள்ளதாகவும் கூறினார்.

மேலும், முரளிக்கு கல்வித்துறையில் டிரைவர் பணியும், அவரது மனைவிக்கு லேப் டெக்னீசியன் பணியும் வாங்கி தருவதாக கூறினார். இதற்காக இருவருக்கும் தலா ரூ.6.5 லட்சம் வீதம் ரூ.13 லட்சம் கேட்டுள்ளார். இதை நம்பிய முரளி, 2 தவணைகளாக ரூ.13 லட்சத்தை தாவீத் ராஜாவிடம் கொடுத்தார்.

ரூ.26.5 லட்சம் மோசடி

இதையடுத்து, முரளியின் தம்பி சிவா மற்றும் அவரது மனைவிக்கும் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மேலும் ரூ.13.5 லட்சம் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால், தாவீத் ராஜா சொன்னபடி யாருக்கும் வேலை வாங்கி தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முரளி, இதுபற்றி புதுவண்ணாரப்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.

விசாரணையில் புகார் உண்மை என தெரியவந்தது. இதையடுத்து தாவீத் ராஜாவை போலீசார் கைது செய்தனர். மேலும், மோசடி செய்த பணத்தில் பல்லாவரத்தில் நிலம் வாங்கியிருந்ததும் தெரிய வந்தது. அந்த நிலத்துக்கான பத்திரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான தாவீத் ராஜாவை சிறையில் அடைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com