

சென்னை,
சென்னை தியாகராய நகரில் உள்ள கவிஞர் கண்ணதாசனின் சிலைக்கு அவரது 92வது பிறந்த நாளையொட்டி தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, பாண்டியராஜன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், தமிழக அரசு பற்றி எந்த குறையும் கூறாமல் ஆய்வுகள் நடத்தி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அரசை ஊக்கப்படுத்துகிறார் என அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார்.
ஆளுநர் ஆய்வு செய்வதில் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. அரசியல் சாசன சட்டத்தின்படி ஆளுநர் அவரது கடமைகளை செயல்படுத்துகிறார். ஆளுநர் ராஜ்பவனில் மட்டும் இருக்க வேண்டும் என்ற நிலை கிடையாது.
அவருக்கு எதிராக தி.மு.க. கருப்பு கொடி காட்டுவது சட்டரீதியாக சரியல்ல. அவர்கள் ஆளுநருக்கு எதிராக போராடுவது சட்டப்படியோ, தார்மீக ரீதியிலோ சரியானது அல்ல.
நாங்கள் அம்மா (ஜெயலலிதா) வழியில் ஆட்சியை நடத்துகிறோம். அதனால் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. நக்சலைட்டுகள் பற்றி உண்மைக்கு புறம்பான கருத்துகளை மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறி வருகிறார்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியிலேயே தமிழகத்தில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளின் ஊடுருவல் தடுக்கப்பட்டு உள்ளது. பசுமை வழி சாலை அமைப்பதில் பாதிப்பினை விட பலன்கள் அதிகம் கிடைக்கும் என கூறினார்.