மின்னல் தாக்கி தென்னை மரம் விழுந்ததில் தாத்தா-பேத்தி பலி

ஆற்காடு அருகே விவசாய நிலத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த தாத்தா-பேத்தி தென்னை மரம் விழுந்ததில் உயிரிழந்தனர்.
மின்னல் தாக்கி தென்னை மரம் விழுந்ததில் தாத்தா-பேத்தி பலி
Published on

ஆற்காடு:

ராணிப்பேட்டை மாவட்ட பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை மழை பெய்து வந்தது. எனினும் கடந்த சில தினங்களாக வெயில் கொளுத்தி வந்தது. இந்த நிலையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

ஆற்காட்டை அடுத்த திமிரி அருகே உள்ள ஆயிரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 72). இவரது மகன் ஏகாம்பரம். விவசாயி. ஏகாம்பரத்தின் மகள் லாவண்யா (வயது 17), பிளஸ்-2 படித்துவிட்டு மேல் படிப்பில் சேர இருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வெங்கடேசன், அவரது பேத்தி லாவண்யா ஆகிய இருவரும் விவசாய நிலத்தில் வைக்கோல் போர் போட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மழை பெய்வதற்கான அறிகுறி தென்பட்டுள்ளது.

அப்போது இடி-மின்னல் ஏற்பட்டது. திடீரென அருகில் இருந்த தென்னை மரத்தில் மின்னல் தாக்கியுள்ளது. இதில் வெங்கடேசன், அவரது பேத்தி லாவண்யா மீது தென்னை மரம் சாய்ந்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இருவரும் பலியானார்கள்.

இது குறித்து தகவல் அறிந்த திமிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com