சென்னையில் இருந்து ஹஜ் பயணம் தொடங்க மீண்டும் அனுமதிக்க வேண்டும்

தமிழ்நாடு மற்றும் பக்கத்து மாநிலங்களைச் சேர்ந்த ஹஜ் புனிதப் பயணிகள், சென்னையில் இருந்து பயணத்தை தொடங்க மீண்டும் அனுமதிக்க வேண்டும் என்று மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்விக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னையில் இருந்து ஹஜ் பயணம் தொடங்க மீண்டும் அனுமதிக்க வேண்டும்
Published on

சென்னை,

இதுகுறித்து மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்விக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு மற்றும் பக்கத்து மாநிலங்களிலிருந்து ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வோரின் வசதியைக் கருத்தில் கொண்டு, முன்பிருந்ததுபோல் சென்னையிலிருந்து அவர்கள் ஹஜ் புனித பயணத்தை மேற்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 2022-ம் ஆண்டிற்கான ஹஜ் புனிதப் பயணப் புறப்பாட்டு இடமாக சென்னை விமான நிலையத்தை அனுமதிக்க வேண்டுமென்று கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு 11.11.2021 அன்று எழுதியுள்ள கடிதத்தின் மீது உங்கள் கவனத்தை ஈர்க்க விழைகிறேன்.

கொரோனா தொற்று

ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், சென்னையிலிருந்து சவுதி அரேபியாவிற்கு தங்களது பயணத்தைத் தொடங்குகின்றனர். தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் மற்றும் லட்சத்தீவுகள் பகுதிகளிலிருந்து ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்பவர்கள் பயனடையும் வகையில் சென்னையில் இருந்து ஜெட்டாவிற்கும், அங்கிருந்து திரும்பி வருவதற்கும், 1987-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை நேரடி ஹஜ் விமானங்கள் இயக்கப்பட்டன.

2019-ம் ஆண்டில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இருந்து 4,500-க்கும் மேற்பட்டோர், தங்களது ஹஜ் புனிதப் பயணத்தை சென்னையில் இருந்து தொடங்கினர். இந்த சூழ்நிலையில், கொரோனா தொற்று காரணமாக, ஹஜ் புனித பயண புறப்பாட்டு இடங்களின் எண்ணிக்கை 21-லிருந்து 10-ஆக குறைக்கப்பட்டது. தமிழ்நாட்டை சேர்ந்த ஹஜ் பயணிகள் தங்களது புனித பயணத்தை கேரள மாநிலம், கொச்சியிலிருந்து தொடங்கிட அனுமதிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் சென்னையில் இருந்து....

தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் புனித பயணம் மேற்கொள்வோர், கொச்சிக்கு சென்று பயணத்தை தொடங்குவதால், 700 கி.மீ.க்கு மேல் கூடுதலாக பயணம் செய்ய வேண்டியுள்ளதோடு, பல சிரமங்களையும், கூடுதல் செலவுகளையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தற்போது சவூதி அரேபிய அரசு பல நாடுகளிலிருந்து புனித பயணமாக வருவோருக்கு கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ள நிலையில், ஹஜ் புனித பயண புறப்பாட்டு இடங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இது தொடர்பாக இஸ்லாமிய சமூகத்தினரிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

எனவே, தமிழ்நாடு மற்றும் பக்கத்து மாநிலங்களிலிருந்து ஹஜ் புனித பயணம் மேற்கொள்வோரின் வசதியை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு அவர்கள் சென்னையிலிருந்து தங்களது ஹஜ் புனித பயணத்தை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com