மயிலாடுதுறை அருகே தூக்கில் கர்ப்பிணி பிணம்

மயிலாடுதுறை அருகே தூக்கில் கர்ப்பிணி, பிணமாக தொங்கினார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை அருகே தூக்கில் கர்ப்பிணி பிணம்
Published on

மயிலாடுதுறை அருகே தூக்கில் கர்ப்பிணி, பிணமாக தொங்கினார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூக்கில் கர்ப்பிணி பெண்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே அன்னவாசல் கிராமத்தை சேர்ந்த அன்பழகன் மகள் காயத்திரி(வயது 26). இவருக்கும், மேலப்பாதி கிராமத்தை சேர்ந்த ராஜேஷ்(32) என்பவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. தற்போது காயத்திரி மீண்டும் கர்ப்பம் அடைந்திருந்தார்.

நேற்று முன்தினம் இரவு காயத்திரி தனது கணவர் வீட்டில் தூக்கில் தொங்கினார். அதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், காயத்திரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காயத்திரியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சாவில் சந்தேகம் உள்ளதாக புகார்

இதை தொடர்ந்து மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த காயத்திரியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.

தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக காயத்திரியின் தந்தை அன்பழகன், செம்பனார்கோவில் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

உறவினர்கள் தர்ணா போராட்டம்

இதற்கிடையே தனது மகளை அடித்து கொன்று விட்டதாகவும், அவரது சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் காயத்திரியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மயிலாடுதுறை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தினால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com