ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி: அண்ணா நகரில் நாளை மறுநாள் போக்குவரத்து மாற்றம்

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிக்காக அண்ணா நகரில் நாளை மறுநாள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி: அண்ணா நகரில் நாளை மறுநாள் போக்குவரத்து மாற்றம்
Published on

சென்னை,

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

கே4 அண்ணாநகர் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குப்பட்ட இரண்டாவது நிழற்சாலையில் நாளை மறுநாள் (28-ம் தேதி) "ஹேப்பி ஸ்ட்ரீட்" என்ற நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் இரண்டாவது நிழற்சாலையில் புளுஸ்டார் சந்திப்பு முதல் 2-வது நிழற்சாலை மற்றும் 3-வது பிரதான சாலை சந்திப்பு (நல்லி சில்க்ஸ்) வரை காலை 6.00 மணிமுதல் 09.00 மணிவரை போக்குவரத்து முற்றிலுமாக தடைசெய்யப்பட்டு மேற்கண்ட நிகழ்வுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

எனவே, திருமங்கலத்திலிருந்து அண்ணாநகர் ரவுண்டானா சிந்தாமணி நோக்கி செல்லும் வாகனங்கள் புளுஸ்டார் சந்திப்பில் 5-வது நிழற்சாலையில் இடதுபுறம் திரும்பி 6-வது நிழற்சாலை, கே4 பி.எஸ் ரவுண்டானாவை அடைந்து சிந்தாமணி, ரவுண்டானாவுக்கு செல்ல வேண்டும்.

திருமங்கலத்திலிருந்து அமைந்தகரை, ஈ.வெ.ரா சாலை நோக்கி செல்லும் வாகனங்கள், புளுஸ்டார் சந்திப்பில் 5வது நிழற்சாலையில் வலதுபுறம் திரும்பி 4வது நிழற்சாலையை அடைந்து அமைந்தகரை பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு செல்லவேண்டும்.

அண்ணாநகர் ரவுண்டானாவிலிருந்து திருமங்கலம் நோக்கி செல்லும் வாகனங்கள் 2வது நிழற்சாலையில் நல்லி சில்க்ஸ் அருகே 3-வது பிரதானசாலையில் இடதுபுறம் திரும்பி 4வது நிழற்சாலை வழியாக திருமங்கலம், முகப்பேர் செல்லவேண்டும்.

புளுஸ்டார் சந்திப்பில் 5வது நிழற்சாலையிருந்து (ஜெஸ்சி மோசஸ் பள்ளி மார்க்கதிலிருந்து) இரண்டாவது நிழற்சாலைக்கு (அண்ணாநகர் ரவுண்டானா நோக்கி) இடதுபுறம் திரும்புவதை தவிர்த்து 5வது நிழற்சாலையில் நேராக சென்று 4-வது நிழற்சாலை வழியே செல்ல வேண்டும்.

மேற்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே செயல்படுத்தப்படும். எனவே வாகனஓட்டிகளும், பொதுமக்களும் மற்றும் குடியிருப்புவாசிகளும் ஒத்துழைப்பு தருமாறு சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறைசார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com