என் வளர்ச்சியை தன் வளர்ச்சியாக கருதி என்னை ஊக்கப்படுத்தியவர்: மு.க. முத்து மறைவுக்கு மு.க. ஸ்டாலின் இரங்கல்

என் ஆருயிர் அண்ணனுக்கு அன்பு உணர்வுடன் எனது அஞ்சலியை நான் செலுத்துகிறேன் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
என் வளர்ச்சியை தன் வளர்ச்சியாக கருதி என்னை ஊக்கப்படுத்தியவர்: மு.க. முத்து மறைவுக்கு மு.க. ஸ்டாலின் இரங்கல்
Published on

சென்னை,

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி மற்றும் பத்மாவதி தம்பதியருக்கு மூத்த மகனாக பிறந்தவர் மு.க. முத்து. இந்நிலையில், கடந்த சில நாட்களாக கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த அவர், இன்று காலை 8 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 77.

அவருக்கு அறிவுநிதி என்றொரு மகனும், தேன்மொழி என்ற மகளும் உள்ளனர். மறைந்த மு.க. முத்து உடலுக்கு, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடைய மறைவை தொடர்ந்து, முதல்-அமைச்சர் இன்று பங்கேற்க இருந்த பல்வேறு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

இதனையடுத்து, தி.மு.க.வில் இன்று முக்கிய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. அவருடைய மறைவுக்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதேபோன்று, மு.க. முத்துவின் உடலுக்கு தமிழக அமைச்சர்கள், தி.மு.க. நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மு.க. முத்துவின் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில், முத்தமிழறிஞர் கலைஞர் குடும்பத்தின் மூத்த பிள்ளை, என்னுயிர் அண்ணன் மு.க. முத்து மறைவுற்றார் என்ற செய்தி இன்று காலையில் என்னை இடியென தாக்கியது. தாய் - தந்தையர்க்கு இணையாக என் மீது பாசம் காட்டிய அன்பு அண்ணனை இழந்து விட்டேன் என்ற துயரம் என்னை வதைக்கிறது.

தந்தை முத்துவேலர் நினைவாக அண்ணனுக்கு மு.க. முத்து என்று பெயர் சூட்டினார் தலைவர் கலைஞர். தலைவர் கலைஞரை போலவே இளமைக்காலம் முதல் நாடகங்களின் மூலமாக திராவிட இயக்கத்துக்கு தொண்டாற்ற தொடங்கியவர் அண்ணன் முத்து.

நடிப்பிலும், வசன உச்சரிப்பிலும், உடல் மொழியிலும் தனக்கென தனிப்பாணியை வைத்திருந்தார். அத்தகைய ஆற்றல், ஆர்வம் காரணமாக திரைத்துறையில் 1970-ஆம் ஆண்டில் நுழைந்தார். அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே இரட்டை வேடத்தில் நடித்தார்.

பிள்ளையோ பிள்ளை, பூக்காரி, சமையல்காரன், அணையா விளக்கு ஆகிய படங்களின் மூலமாக தமிழ்நாட்டு ரசிகர் மனதில் நிரந்தரமாக குடியேறினார் அண்ணன் மு.க. முத்து.

பல நடிகர்களுக்கு வாய்க்காத சிறப்பு அவருக்கு இருந்தது. தனது சொந்த குரலில் பாடல்களை இனிமையாக பாடும் திறனை பெற்றிருந்தார். 'நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா' என்ற பாடலும், 'சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க' என்ற பாடலும் பலராலும் இன்றும் மறக்க முடியாத பாடல் ஆகும்.

என் மீது எப்போதும் பாசத்துடன் இருந்து, எனது வளர்ச்சியை தன் வளர்ச்சியாக கருதி, எப்போதும் என்னை ஊக்கப்படுத்தி வந்தவர் அவர். எப்போது அவரை பார்க்க சென்றாலும், பாசத்துடன் பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார். வயது மூப்பின் காரணமாக அவர் மறைவுற்றாலும் அன்பால் எங்கள் மனதிலும், கலையாலும், பாடல்களாலும் மக்கள் மனதிலும் என்றும் வாழ்வார் அண்ணன் மு.க.முத்து. என் ஆருயிர் அண்ணனுக்கு அன்பு உணர்வுடன் எனது அஞ்சலியை நான் செலுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com