

சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகர்ப் பகுதியில் 2 பைக்குகள் அதிவேகமாக நேருக்கு நேர் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியின் முக்கிய சாலைப் பகுதியில் தினமும் பல வாகனங்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் (திங்கட்கிழமை) சித்திக் (வயது 38) என்பவர் தனது பைக்கில் அதிவேகமாக சென்று கொண்டிருந்தார். இதையடுத்து எதிர் திசையில் இருந்து மற்றொருவரும் அதிவேகமாக தனது பைக்கில் வந்துள்ளார். அப்போது வளைவு பகுதி ஒன்றில் எதிர்பாராதவிதமாக 2 பைக்குகளும் கட்டுப்பாட்டை இழந்து, கண் இமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.
இந்த கோர விபத்தில் 2 பைக்குகளும் சுக்குநூறாக நொறுங்கின. இதில் தூக்கி வீசப்பட்ட சித்திக்கின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து உயிரிழந்தார். மற்றொரு வாலிபர் உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கும், 108 ஆம்புலன்ஸுக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காயமடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விபத்துக்கான காரணம் குறித்து காரைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காரைக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதிவேகமாக செல்லும் வாகனங்களால் தொடர்ந்து இதுபோன்ற விபத்துகள் அதிகரித்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.