

தூத்துக்குடி,
விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயன், கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வை போலீசார் நேற்று முன்தினம் காலை கைது செய்தனர். பின்னர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் வைத்து அவரிடம் சுமார் 11 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணைக்குப் பிறகு, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தூத்துக்குடி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நீதிபதி சுமதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் மனு தாக்கல் செய்தனர்.
ஆனால், அந்த மனுவை நீதிபதி நிராகரித்ததுடன், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வை ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையில், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தரப்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. அதன்படி, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று (புதன்கிழமை) தூத்துக்குடி கோர்ட்டில் நடைபெறவுள்ளதாக கோர்ட்டின் ஆன்லைன் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்த விசாரணையின் முடிவு அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.