

மதுரை
கனமழையால் மும்பை-மதுரை விமானம் தரையிறங்குவதில் அரை மணிநேரத்திற்கும் மேலாக சிக்கல் ஏற்பட்டது.
மராட்டியத்தின் மும்பை நகரில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 165 பயணிகளுடன் மதுரை நோக்கி புறப்பட்டு வந்த இண்டிகோ பயணிகள் விமானம், மதுரை சர்வதேச விமான நிலையத்திற்கு மாலை 3.45 மணியளவில் வந்தடைந்தது.
அப்போது, மதுரையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. மதுரையில் ஆரப்பாளையம், கோரிப்பாளையம், கே.கே.நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் தெப்பக்குளம், திருப்பரங்குன்றம், வில்லாபுரம், அவனியாபுரம், பெருங்குடி, பசுமலை, தனக்கன்குளம் உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்தது.
அதனுடன் மேகம் சூழ்ந்து தெளிவற்ற வானிலை காணப்பட்டது, தொழில்நுட்ப கோளாறுகள் ஆகியவற்றால், விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து, 1 மணிநேரத்திற்கும் மேலாக மானாமதுரை அருகே வானில் வட்டமடித்தது. இதனால் பயணிகள் பதற்றமடைந்தனர்.
இதன்பின்னர் அவசரகால பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, விமானம் தரையிறக்கம் செய்யப்பட்டது. விமானத்தில், மொத்தம் 165 பயணிகள் இருந்தனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதன் பின்னரே, பயணிகள் நிம்மதி அடைந்தனர்.