

நாகை,
நாகை மாவட்டத்தில் 3 நாட்களாக கொட்டித் தீர்த்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. நாகை, நாகூர், வேளாங்கண்ணி, வாஞ்சூர், திட்டச்சேரி உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
அதே போல் நாகை மாவட்டம் திருமருகல், திருக்கண்ணபுரம், கீழ்வேளூர் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் வயலில் சாய்ந்துள்ளன. மேலும் தொடர்ந்து மழை நீடித்து வருவதால், வயல்களில் சாய்ந்து கிடக்கும் நெற்பயிர்களை நீக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
இதனிடையே கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் மீனவர்கள் மீன் பிடிக்க 2 நாட்கள் கடலுக்குச் செல்லாமல் இருந்தனர். இந்த நிலையில் கனமழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக பெரும்பாலான ஃபைபர் படகு மீனவர்களும் 3-வது நாளாக இன்று மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.