81 வயது மூதாட்டியின் கோரிக்கைக்கு இணங்கிய நீதிபதிகள்

81 வயது மூதாட்டியின் கோரிக்கைக்கு இணங்கிய நீதிபதிகள் கைதிக்கு பரோல் வழங்கினர்.
81 வயது மூதாட்டியின் கோரிக்கைக்கு இணங்கிய நீதிபதிகள்
Published on

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே அரிகேசவநல்லூரைச் சேர்ந்த கருமேனி அம்மாள், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:- எனது மகன் பழனிக்கு, கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அவர் பாளையங்கோட்டை சிறையில் தண்டனை கைதியாக உள்ளார். எனக்கு 81 வயதாகிறது. உடல் மிகவும் சோர்ந்துவிட்டது.

இந்த நேரத்தில் எனது மகன் என் அருகில் இருந்தால் சற்று புத்துணர்ச்சியுடன் இருப்பேன். எனவே அவருக்கு ஒரு மாதம் பரோல் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் நிஷாபானு, ஆனந்த்வெங்கடேஷ் ஆகியோர் விசாரித்தனர்.

அப்போது அரசு வக்கீல் திருவடிகுமார் ஆஜராகி, மனுதாரர் மகன் மீது மற்றொரு கொலை வழக்கும் உள்ளது. இதுதவிர, அவருக்கு பரோல் வழங்கினால் சில பிரிவினரிடையே பதற்றமான சூழ்நிலை ஏற்படும். இதை கருத்தில் கொண்டு மனுதாரர் மகனுக்கு பரோல் வழங்குவதை சிறை அதிகாரி நிராகரித்துள்ளார் என்று வாதாடினார்.

விசாரணை முடிவில் நீதிபதிகள், "மனுதாரர் 81 வயதுடையவர். அவர் தனது மகனை 4 ஆண்டுகளுக்கும் மேலாக சந்திக்காமல் உள்ளார். இந்த மூதாட்டி, சிறிது காலம் தன் மகனுடன் இருக்க விரும்புகிறார். மனுதாரர் மகன் மீதான மற்றொரு கொலை வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டு உள்ளார்.

இந்த காரணங்களால் மனுதாரரின் மகனுக்கு போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் 20 நாட்கள் சாதாரண பரோல் வழங்கப்படுகிறது. இந்த நாட்களில் அவர் அரிகேசவநல்லூரில் தனது தாயாருடன் தங்கியிருக்க வேண்டும். அந்த ஊரைவிட்டு வேறு எங்கும் செல்லக்கூடாது. முக்கூடல் போலீசில் தினமும் மாலையில் கையெழுத்திட வேண்டும். பரோல் முடிந்த உடன் பாளையங்கோட்டை சிறை சூப்பிரண்டு முன்பு சரண் அடைய வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com