

திருவண்ணாமலை,
திருவண்ணாமலை கோவிலில் பக்தர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. திருவண்ணாமலை கோவில் நிர்வாகத்திற்கு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவில், கோவிலுக்கு வெளியில் கட்டுமானங்கள் கட்டுவதற்கு புராதன ஆணையத்திடம் ஒப்புதலை பெற்று அதற்கான பணிகளை தொடரலாம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், கிரிவல பாதையில் தற்காலிக கடைகள், சந்நியாசிகளால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதாக குறிப்பிட்ட நீதிபதிகள், காவல் துறையுடன் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளனர். மலையடிவாரத்தில் அனுமதி இல்லாத கட்டிடங்களுக்கு எதிரான நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூலை 30-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.