

சென்னை,
தமிழ்நாட்டில் உள்ள யானைகள் வழித்தடங்களை அடையாளம் கண்டு அறிவிக்க உத்தரவிட வேண்டும் எனக்கோரி கடந்த 2019-ம் ஆண்டு விலங்குகள் நல ஆர்வலர் எஸ்.முரளிதரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில், ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், யானைகள் வழித்தடங்களை கண்டறிய, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் தலைமையில் இரண்டு குழுக்களை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார், நீதிபதி கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு குழு அடையாளம் கண்டிருக்கக்கூடிய 41 பகுதிகளையும் யானைகள் வழித்தடங்களாக அறிவிக்க வேண்டுமா என ஆய்வு செய்து வருவதாக முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் குழு தகவல் தெரிவித்தது.
இதனையடுத்து, தமிழகத்தில் யானைகள் வழித்தடங்களாக அறிவிக்க வேண்டிய பகுதிகளை அடையாளம் காண முதன்மை தலைமை வன பாதுகாவலர் தலைமையிலான குழுவுக்கு 3 மாத காலம் அவகாசம் வழங்கிய ஐகோர்ட்டு, இந்த வழக்கின் விசாரணையை டிசம்பர் 4-ந்தேதிக்கு ஒத்திவைத்தது.