திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை - ஐகோர்ட்டு தீர்ப்பு

இந்த தீர்ப்புகள் திருப்பரங்குன்றம் மலை தொடர்பான நீண்டகால பிரச்சினைகளுக்கு ஒரு முடிவை எட்டியுள்ளன.
மதுரை,
இந்து அமைப்பின் சோலை கண்ணன் மற்றும் சமூக ஆர்வலர்கள், மதுரை ஐகோர்ட்டில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். அதில், திருப்பரங்குன்றம் மலையின் சில பகுதிகள் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமானவை. சிலர் மலை மீது ஆடு, மாடு, கோழி பலியிட்டு மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிக்கின்றனர். இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி இருந்தனர்.
அப்துல் ஜப்பார், தர்கா நிர்வாகம், த.மு.மு.க., எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட கட்சிகள் சார்பில், திருப்பரங்குன்றம் மலையில் வழக்கப்படி நடைபெறும் வழிபாட்டு உரிமைகளை தடுக்க கூடாது. ஆடு, கோழி பலியிட அனுமதிக்க வேண்டும் என மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை நீதிபதிகள் ஜெ. நிஷா பானு, எஸ். ஸ்ரீமதி அமர்வு விசாரித்து மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர். இதனால், வழக்கு 3-வது நீதிபதி ஆர்.விஜயகுமார் விசாரணைக்கு மாற்றப்பட்டது. கடந்த 2 மாதங்களாக தனி நீதிபதி தனது விசாரணையை தொடர்ந்து நடத்தினார்.
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலை சர்ச்சை தொடர்பான வழக்கை மனு மீதான விசாரணை இன்று நீதிபதி ஆர்.விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது. அதில் நீதிபதி ஆர்.விஜயகுமார் வழங்கிய தீர்ப்பில், திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை விதித்து, இது குறித்து சிவில் கோர்ட்டை அணுகி உரிய நிவாரணம் பெற்று கொள்ளலாம் என்ற நீதிபதி ஸ்ரீமதி வழங்கிய தீர்ப்பை உறுதிப்படுத்தினார். மேலும், இஸ்லாமியர்கள் நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்த அனுமதி வழங்கிய நீதிபதி நிஷா பானுவின் உத்தரவையும் உறுதிப்படுத்தினார். இந்த தீர்ப்புகள் திருப்பரங்குன்றம் மலை தொடர்பான நீண்டகால பிரச்சினைகளுக்கு ஒரு முடிவை எட்டியுள்ளன.






