தனியார் பேருந்துகளில் அதிக கட்டண வசூல்; அபராதம் விதித்தால் மட்டும் போதாது - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளுக்கு அபராதம் விதிப்பதால் மட்டும் எந்த தீர்வும் ஏற்படப்போவதில்லை என ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
தனியார் பேருந்துகளில் அதிக கட்டண வசூல்; அபராதம் விதித்தால் மட்டும் போதாது - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
Published on

சென்னை,

அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பாக தலைமை நீதிபதி கங்கபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணை நடைபெற்றது.

அப்போது, அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படுவதில்லை என்றும், அபராதம் மட்டுமே விதிக்கப்படுவதாகவும், தனியார் பேருந்துகள் தொடர்ந்து அதிக கட்டணம் வசூலித்து வருவதாகவும் மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அரசு தரப்பில், இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிர சோதனைகளில் ஈடுபடுவதாகவும், விதிகளை மீறும் பேருந்து நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளுக்கு விதிக்கப்படும் அபராதத்தை 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோர்ட்டு ஏற்கனவே பல வழக்குகளில் உத்தரவிட்டுள்ளதை சுட்டிக்காட்டினர்.

மேலும் அபராதம் விதிப்பதால் மட்டும் எந்த தீர்வும் ஏற்படப்போவதில்லை என குறிப்பிட்ட நீதிபதிகள், தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க அடிக்கடி சோதனைகள் நடத்தப்பட வேண்டும் எனவும், தொடர் குற்றத்தில் ஈடுபடும் தனியார் பேருந்துகளின் உரிமத்தை சஸ்பெண்ட் செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com