தமிழகத்தில் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்க இந்து முன்னணி ஏற்பாடு

வருகிற 14-ம் தேதி கொண்டாடப்பட உள்ள விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் 5,501 இடங்களில் சிலைகள் வைக்கப்பட உள்ளதாக இந்து முன்னணி அமைப்பு தெரிவித்துள்ளது.
விநாயகர் சிலைகள்.
Published on

சென்னை,

வருகிற 14-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்க இந்து முன்னணி அமைப்பு ஏற்பாடுகள் செய்து வருகிறது.

தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள்

வருகிற 14-ம் தேதி கொண்டாடப்பட உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்க இந்து முன்னணி அமைப்பு ஏற்பாடுகள் செய்து வருகிறது. இதுகுறித்து இந்து முன்னணி நிர்வாகிகள் கூறியதாவது:

தமிழகத்தில் நகர்ப்புறங்கள், கிராமப்பகுதிகள் என அனைத்து இடங்களிலும் 1 லட்சத்து 50 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகளை அமைத்து வழிபட திட்டமிடப்பட்டுள்ளது.

இயற்கை பொருட்களால் செய்யப்பட்ட சிலைகளை வைக்க நடவடிக்கை

பொது மக்களுக்கு இடையூறின்றி விழாக்கள் நடத்தவும், சிலைகள் கரைப்பு ஊர்வலத்துக்கான ஏற்பாடுகள் குறித்தும், அந்தந்த மாவட்ட அமைப்பாளர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழலை பாதிக்கும் ரசாயனப் பொருட்களைத் தவிர்த்து முற்றிலும் இயற்கை பொருட்களால் செய்யப்பட்ட சிலைகளையே வழிபாட்டிற்கு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் 5,501 இடங்களில் விநாயகர் சிலைகள்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் 5,501 இடங்களில் சிலைகள் வைக்கப்பட உள்ள நிலையில், எர்ணாவூரில் பிரமாண்ட சிலைகள் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வள்ளுவர் கோட்டம், திருவல்லிக்கேணி, வடசென்னை மற்றும் கொட்டிவாக்கம் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்ட உள்ளன. விழாவை ஒட்டி, காப்பு கட்டி 10 நாட்கள் மேற்கொள்ளப்படும் சிறப்பு விரதம் தொடங்கிவிட்டது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com