தொடர் விடுமுறை: குமரியில் 3 நாட்களில் 34 ஆயிரம் சுற்றுலா பயணிகள் படகில் பயணம்

கன்னியாகுமரியில் ஓணம் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
கன்னியாகுமரி,
புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். குறிப்பாக விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் கூட்டம் அலைமோதும்.
தற்போது ஓணம் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி கடந்த 3 நாட்களாக கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அதில் நேற்று ஞாயிறு விடுமுறை என்பதால் கூட்டம் அலைமோதியது. அதிகாலையில் கடற்கரையில் திரண்ட சுற்றுலா பயணிகள் சூரியன் உதயமான காட்சியை கண்டு களித்தனர். தொடர்ந்து முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட படகுதுறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். படகு போக்குவரத்து தொடங்கியதும் படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபம், கண்ணாடி நடை பாலம் வழியாக திருவள்ளுவர் சிலைக்கு சென்றனர்.
சுற்றுலா பயணிகளின் வருகையால் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான விவேகானந்தா கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், சுற்றுச்சூழல் பூங்கா போன்ற பகுதிகளில் நேற்று காலையில் இருந்து கூட்டம் நிரம்பி வழிந்தது. கன்னியாகுமரி கடற்கரையில் நேற்று மாலையில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் வருகை அதிகளவில் இருந்தது. இதனால் கடற்கரை ‘களை’ கட்டியது.
கடந்த 3 நாட்கள் ஓணம் பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு கன்னியாகுமரிக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை 9 ஆயிரத்து 679 பேரும், சனிக்கிழமை 11 ஆயிரத்து 637 பேரும், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 13 ஆயிரத்து 94 பேர் என மொத்தம் 34 ஆயிரத்து 410 பேர் படகில் சென்று பார்வையிட்டு உள்ளனர்.
இதில் வெள்ளிக்கிழமை 2 ஆயிரத்து 295 பேரும், சனிக்கிழமை 4 ஆயிரத்து 162 பேரும், நேற்று 2 ஆயிரத்து 459 பேர் என 8 ஆயிரத்து 916 பேர் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்து படகில் பயணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.






