தமிழ்நாட்டில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.57,700 ஊதியம்: அன்புமணி வலியுறுத்தல்

இந்தியாவிலேயே கவுரவ விரிவுரையாளர்களுக்கு மிகக்குறைந்த ஊதியம் வழங்கும் மாநிலம் தமிழகம்தான் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.57,700 ஊதியம்: அன்புமணி வலியுறுத்தல்
Published on

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் தங்களின் ஊதியத்தை பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைப்படி ரூ.57,700 ஆக உயர்த்த வேண்டும், ரூ.25 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் போராட்டம் 4-வது நாளாக இன்றும் நீடிக்கும் நிலையில் அவர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சு நடத்துவதற்குக் கூட அரசு இன்னும் முன்வராதது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் உள்ள 180 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 2009-ம் ஆண்டில் கவுரவ விரிவுரையாளர்கள் முதன் முதலில் நியமிக்கப்பட்டபோது, அவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. அதன்பின் அவர்களின் ஊதியம் படிப்படியாக உயர்த்தப்பட்டு இப்போது ரூ.25,000 வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டு முழுவதும் பணி செய்தாலும் அவர்களுக்கு 11 மாதங்களுக்கு மட்டும்தான் ஊதியம் வழங்கப்படுகிறது.

கவுரவ விரிவுரையாளர்கள் என்ற பெயரில் அழைக்கப்பட்டாலும், அவர்கள் எந்த உரிமையும் இல்லாத அடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர். இப்போதுள்ள கவுரவ விரிவுரையாளர்களில் பெரும்பான்மையினர் 16 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு பணிப்பாதுகாப்போ, சமூகப்பாதுகாப்போ எதுவும் கிடையாது. வரும் ஏப்ரல் மாதத்தில் அவர்கள் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டால், மே மாதம் முதல் அவர்களுக்கு வாழ்வாதாரம் இல்லை என்ற நிலை தான் நிலவுகிறது. இந்த நிலையை மாற்றி அவர்களுக்கு கண்ணியமான வாழ்க்கை அமைய வேண்டும் என்றால், அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

பல்கலைக்கழக மானியக்குழு நிர்ணயித்த ஊதியத்தை வழங்க வேண்டும் என்று திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் அவர்கள் கோரிக்கையை கடந்த ஐந்தாண்டுகளில் பரிசீலிப்பதற்குக் கூட திமுக அரசு தயாராக இல்லை. கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியம் தொடர்பாக 28.1.2019-ம் நாள் ஆணையிட்ட பல்கலைக்கழக மானியக் குழு, அவர்களுக்கு ஒரு பாடவேளைக்கு ரூ.1,500 வீதம் மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.50,000 மதிப்பூதியம் வழங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது. கவுரவ விரிவுரையாளர்கள் தொடர்பான இன்னொரு வழக்கில் தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட்டு, சம வேலைக்கு சம ஊதியம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் அரசு கல்லூரி நிரந்தர விரிவுரையாளர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை ஊதியமான ரூ.57,700 வழங்கப்பட வேண்டும் என்று ஆணையிட்டது. ஆனால், இந்த இரண்டில் எதையுமே திமுக அரசு செயல்படுத்தவில்லை.

பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைத்த ஊதியத்தை வழங்க ஆணையிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில் 21.3.2024-ம் நாள் தீர்ப்பளித்த சென்னை ஐகோர்ட்டு ‘‘கல்லூரி மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் அளவுக்கு கல்வித்தகுதி பெற்ற கவுரவ விரிவுரையாளர்களை வேலைவாய்ப்பின்மையை பயன்படுத்திக் கொண்டு மிகக்குறைந்த ஊதியத்தில் அரசு பணியமர்த்தியுள்ளது. கவுரவ விரிவுரையாளர்களும் வேறு வழியின்றி கிடைக்கும் ஊதியத்தை ஏற்றுக் கொண்டு பணி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். உண்மையில் அவர்களுக்கு அரசு வழங்குவது மதிப்பூதியம் அல்ல.... அவமதிப்பூதியம். பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைத்தவாறு கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்’’ என்று அறிவுறுத்தியது. ஆனால், அந்தத் தீர்ப்பை திமுக அரசு சிறிதும் மதிக்கவில்லை.

அதைத் தொடர்ந்து கவுரவ விரிவுரையாளர்கள் தொடர்ந்த இன்னொரு வழக்கில் 18.10.2024-ம் நாள் தீர்ப்பளித்த சென்னை ஐகோர்ட்டு, கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியத்தை ரூ.50,000 ஆக உயர்த்துவது குறித்து நவம்பர் 30-ம் தேதிக்குள் அரசு முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என ஆணையிட்டது. ஆனால், அதை ஏற்க மறுத்து விட்ட திமுக அரசு, ரூ.25,000 மட்டுமே மாத ஊதியம் வழங்க முடியும் என அறிவித்து அதை செயல்படுத்தி வருகிறது. இன்றைய நிலையில் தினக்கூலி தொழிலாளர்களுக்குக் கூட மாதம் ரூ.25,000க்கும் கூடுதலாக ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், முனைவர் பட்டம் பெற்ற கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.25,000 மட்டுமே ஊதியம் வழங்குவது கண்ணியமற்ற செயல் ஆகும்.

இந்தியாவில் பல மாநிலங்களில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைத்த ஊதியம் வழங்கப்படுகிறது. கேரளம், பஞ்சாப், தில்லி ஆகிய மாநிலங்களில் ரூ.50,000, பஞ்சாப் மாநிலத்தில் ரூ.57,700, புதுச்சேரியில் ரூ.40,000 வீதம் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. இந்தியாவிலேயே கவுரவ விரிவுரையாளர்களுக்கு மிகக்குறைந்த ஊதியம் வழங்கும் மாநிலம் தமிழகம்தான்.

கவுரவ விரிவுரையாளர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் சமூக அநீதியை தமிழக அரசு உடனடியாக களைய வேண்டும். மாதம் ரூ.57,700 ஊதியம், 12 மாதமும் ஊதியம், வருங்கால வைப்பு நிதி, மருத்துவக் காப்பீடு, பெண் கவுரவ விரிவுரையாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு, பணி ஓய்வின் போது ரூ.25 லட்சம் பணிக்கொடை என்பன உள்ளிட்ட அவர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com