காஞ்சீபுரம் அருகே பயங்கரம்: சேற்றில் தலையை அமுக்கி வாலிபர் கொலை

காஞ்சீபுரம் அருகே நண்பர்கள் 2 பேருக்கு இடையே மதுவை பங்கு பிரிப்பதில் தகராறு ஏற்பட்டது.
வாலிபர் கொலை
Published on

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் அருகே நண்பர்கள் 2 பேருக்கு இடையே மதுவை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில், சேற்றில் தலையை அமுக்கி வாலிபர் கொலை செய்யப்பட்டார்.

மதுவை அளவு பிரிப்பதில் தகராறு

காஞ்சீபுரம் தாலுகா காரை கிராமத்தை சேர்ந்தவர் அருள்மணி (வயது 29). கூத்திரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(28). இருவரும் நண்பர்கள். வேலைக்கு எதுவும் செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு காரை அடுத்த சேமந்தாங்கள் ஏரி பகுதியில் அமர்ந்து நண்பர்கள் இருவரும் மது குடிக்க முயன்றனர். அப்போது மதுவை அளவு பிரிப்பதில் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

வாலிபர் கொலை

இதில் ஆத்திரம் அடைந்த அருள்மணி, மணிகண்டனை அந்த பகுதியில் சேறும் சகதியுமான குட்டையில் தலையை வைத்து அமுக்கினார். இதில் மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார்.

நண்பர் கைது

அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்துவிட்டு உடனடியாக பொன்னேரிகரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து சென்ற போலீசார் சேற்றில் அமுக்கி கொலை செய்யப்பட்டு கிடந்த மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அருள்மணியை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மது குடிக்கும் தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com