சிவகாசி அருகே தாய்-மகள் தற்கொலை

சிவகாசி அருகே மகன் வெளியூரில் படிக்க சென்ற நிலையில் மனவருத்தம் அடைந்த தாய், சகோதரி 2 பேரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
Published on

சிவகாசி

சிவகாசி அருகே மகன் வெளியூரில் படிக்க சென்ற நிலையில் மனவருத்தம் அடைந்த தாய், சகோதரி 2 பேரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

ஓட்டல் தொழிலாளி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்சாமி. இவருக்கு வனிதாராணி என்ற மனைவியும், லோகேஸ்ராஜ் என்ற மகனும், காவியபிரியா என்ற மகளும் இருந்தனர். மகனும், மகளும் விஸ்வநத்தத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளனர். வேல்சாமி பொள்ளாச்சியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார். தேவைப்படும்போது விஸ்வநத்தம் வந்து மனைவி, குழந்தைகளை பார்த்துவிட்டு செல்வாராம்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் லோகேஸ்ராஜ் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் தொடர்ந்து அந்த தனியார் பள்ளியில் படிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

அப்பாவுக்கு போன்..

இதை தொடர்ந்து அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் லோகேஸ்ராஜை சேர்க்க வனிதாராணி முடிவு செய்து இருந்தார். அதற்கு லோகேஸ்ராஜ் மறுப்பு தெரிவித்து விட்டு, தான் பாலிடெக்னிக் படிக்க இருப்பதாக கூறி உள்ளார். இந்த நிலையில் பொள்ளாச்சியில் உள்ள தனது தந்தைக்கு போன் செய்த லோகேஸ்ராஜ், தன்னை பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்க்க வலியுறுத்தி உள்ளார். இதனை தொடர்ந்து பொள்ளாச்சியில் இருந்து விஸ்வநத்தம் திரும்பிய வேல்சாமி தனது மகனை பொள்ளாச்சி அழைத்து சென்றுள்ளார். இதற்கிடையில் தனது தாய் வனிதாராணிக்கு போன் செய்த லோகேஸ்ராஜ் தான் பொள்ளாச்சியில் பாலிடெக்னிக் படிக்க இருப்பதாக கூறி உள்ளார்.

தற்கொலை

இதனால் அதிர்ச்சி அடைந்த வனிதாராணி, தன் மகன் தன்னை விட்டு பிரிந்து சென்று விட்டான் என்ற மனவருத்தத்தில் மகள் காவியபிரியாவுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பக்கத்து வீட்டில் வசிக்கும் 6 வயது சிறுமி, காவிய பிரியா வீட்டுக்கு விளையாட வந்த போது வனிதாராணி, காவிய பிரியா இருவரும் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அருகில் உள்ள வீடுகளில் இருந்தவர்களிடம் கூறி உள்ளாள். அதன் பிறகு அப்பகுதியை சேர்ந்தவர்கள் சிவகாசி டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தற்கொலை செய்து கொண்ட தாய், மகள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மகன் வெளியூரில் படிக்க சென்றதால் மனமுடைந்த தாய், சகோதரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சிவகாசி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com