

செஞ்சி,
செஞ்சி அருகே பொறியியல் கல்லூரி நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் எம்பியுமான கமல்ஹாசன் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- முதல் அமைச்சர் ஆவதற்காக நான் அரசியலுக்கு வரவில்லை. நேரடியாக நட்சத்திரமாகவே சினிமாவுக்கு வருவேன் என யாரேனும் கூறினால் அவன் விவரம் தெரியாதவன். தினமும் பசிப்பது போல அரசியலும் நம் அன்றாட நடவடிக்கையாக இருக்க வேண்டும். முழு நேரமும் மாணவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டும். ரீல்ஸ் மட்டுமே வாழ்க்கையில்லை. ஒருவர் பின்னால் மந்தையாக சென்றால் எந்த பயனும் இல்லை. அரசியல்வாதி மோசமாக லஞ்சம் வாங்குவார் என்றால் அதில் உங்கள் பங்கும் உள்ளது.
சுயநலக்காரர்கள் கையில் ஏஐ உள்ளது. ஏஐயை மாணவர்கள் அளவாக பயன்படுத்த வேண்டும். என்னுடைய ரோடு பள்ளமாக இருக்கிறது என்றால் அதற்கு நான் காரணமா? என்று யோசித்து பாருங்கள். கண்டிப்பாக நீங்களும் காரணம். அரசியல்வாதி மோசமாக இருக்கிறார்.. லஞ்சம் வாங்குகிறார் என்றால் அதில் உங்கள் கையும் உள்ளது. கொடுக்கிற கை நீண்டால்தான் வாங்குகிற கை நீளும். அப்படி இருக்கும் போது எல்லோரும் நல்லவங்கள்தானே, நாம் வேலையை பார்த்துவிட்டு சந்தோஷமாக இருந்துவிடலாம் என்றால் முடியாது” என்றார்.