கோவையில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை - ரவுடி வரிச்சியூர் செல்வம்

ரவுடி வரிச்சியூர் செல்வத்தை சுட்டுப் பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவையில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை - ரவுடி வரிச்சியூர் செல்வம்
Published on

கோவை,

மதுரை அருகே வரிச்சியூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவர் மீது கொலை, ஆள்கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. பெரிய பெரிய தங்கச்சங்கிலிகளையும், நகைகளையும் அணிந்து ஒரு நடமாடும் நகைக்கடையாகவே நடமாடி வருகிறார்.

தமிழகத்தில் பிரபல ரவுடியாக வலம் வந்த அவர், கடந்த 2022 ஆண்டு ஒரு வீடியோவை வெளியிட்டு, "நான் ரவுடி அல்ல. சாதாரண மனிதனாக வாழ்கிறேன்" என்று கூறி இருந்தார். ஆனால், அந்த வீடியோ என்பது போலீசாரின் கவனத்தை திசைதிருப்ப அவர் நடத்திய நாடகம் என தற்போது தெரியவந்தது. தொடர்ந்து அவரை போலீசார் கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில், கோவையில் பயங்கர ஆயுதங்களுடன் வரிச்சூர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் கோவை மாநகரம் முழுவதும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு, அவரை தேடினர்.இருப்பினும் எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து கோவை மாநகர் காவல்துறை ஆணையர் சரவண சுந்தர், வரிச்சூர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் யாரேனும் கண்ணில் பட்டால் அவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் வரிச்சூர் செல்வத்தை காலில் சுட்டு பிடிக்க காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில், மதுரை கருப்பாயூரணியில் உள்ள அவரது இல்லத்தில் ரவுடி வரிச்சியூர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் எந்த பிரச்சினைக்கும் போகவில்லை. கோவையில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.. நான் கோவைக்கு சென்று 13 வருடங்கள் ஆகிவிட்டது. கோவையில் செல்லையா என்பவரை தவிர வேறு யாரையும் எனக்கு தெரியாது. தப்பு செய்தால் போலீஸ் சுட தான் செய்வார்கள்; எனக்கு எதிரியே கிடையாது. கோவை மாநகர காவல் ஆணையரின் உத்தரவு அதிர்ச்சியாக உள்ளது. ஒரு ஆள் இருக்கும்போது பேருக்காக போலீஸ் சுட தேவை என்ன இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com