'வெடிகுண்டு வீசுவேன்' என பேசிய விவகாரம்: நேரில் ஆஜராக சீமானுக்கு ஈரோடு போலீசார் சம்மன்


வெடிகுண்டு வீசுவேன் என பேசிய விவகாரம்: நேரில் ஆஜராக சீமானுக்கு ஈரோடு போலீசார் சம்மன்
x

கோப்புப்படம் 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, வெடிகுண்டு வீசுவேன் என்று பேசிய வழக்கில் நேரில் ஆஜராக சீமானுக்கு போலீசார் சம்மன் கொடுத்துள்ளனர்.

சென்னை,

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின்போது, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பவானி சாலையில் ரிக்கல் மேடு என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, "பெரியார் பிறந்த மண்ணில் நின்றுதான் அவரை விமர்சிக்கிறேன்; உங்களால் என்ன செய்துவிட முடியும்?

நீங்கள் வைத்திருப்பது வெறும் பெரியார் எனும் வெங்காயம்.. என் கையில் இருப்பது வெடிகுண்டு. நீங்கள் என் மீது வெங்காயத்தை வீசுங்கள். நான் வெடிகுண்டை வீசுகிறேன்; என்ன நடக்கிறது என பார்ப்போம்" என்று பேசியிருந்தார். இந்த பேச்சு, வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாகவும், இனம், மொழி அடிப்படையில் பிரிவினையை தூண்டும் வகையில் இருப்பதாகவும் புகார் எழுந்தது.

இது தொடர்பாக சீமான் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈரோடு பெரியார், அம்பேத்கர் கூட்டமைப்பு சார்பில், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் போலீசாரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் கருங்கல்பாளையம் போலீசார், சீமான் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு வருகிற 20-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் இல்லத்திற்கு நேரில் சென்று ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் சம்மன் வழங்கினர்.

ஏற்கனவே பெரியாரைப் பற்றி அவதூறாக பேசிய விவகாரத்தில் வடலூர் மற்றும் ராணிப்பேட்டை காவல் நிலையங்களில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சம்மன் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வன்முறையை தூண்டும் விதமாக பேசிய விவகாரத்தில் மூன்றாவது சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story