"குதிரை பேரம் உண்மையாக இருந்தால்"... திருமாவளவன் பரபரப்பு பேட்டி

கவர்னருக்கு அந்த அதிகாரம் இருந்தால் அவர் உடனடியாக தலையிட வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்தார்.
"குதிரை பேரம் உண்மையாக இருந்தால்"... திருமாவளவன் பரபரப்பு பேட்டி
Published on

சென்னை,

த.வெ.க. எம்.எல்.ஏ.வை விலைக்கு வாங்க ரூ.180 கோடியில் சதித்திட்டம் தீட்டப்பட்டதாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரது தம்பி அசோக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர். எனவே த.வெ.க. ஆட்சியை கலைக்க குதிரை பேரம் நடத்துவதாக தி.மு.க. மீது த.வெ.க. வெளிப்படையாக குற்றம் சாட்டி வருகிறது.

இதற்கிடையில் த.வெ.க. அரசுதான் குதிரைபேரம் நடத்துவதாக தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா ஆகிய எதிர்க்கட்சிகள் கவர்னர் ஆர்.வி.அர்லேகரிடம் நேற்று புகார் மனு அளித்துள்ளன. இதனால் தமிழக அரசியல் சூழ்நிலை முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பரபரப்பாக இருக்கிறது.

இதுதான் ஜனநாயகமா?

இந்த நிலையில், குதிரை பேரம் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அதிமுகவிற்குள் என்ன நடக்கிறது என்பது குறித்து அதிமுக தலைவர்கள் ஏன் வாய் திறக்க மறுக்கிறார்கள்; தவெகவிற்கு எதிராக கொந்தளிக்க வேண்டியவர்கள் அமைதி காப்பதன் பொருள் என்ன?. "அதிமுகவை முழுவதுமாக தவெகவில் இணைப்போம் என்று தவெக தரப்பில் சொல்லப்படுகிறதென்றால் அவர்களிடம் இது சரியா? ஜனநாயகமா? அரசியல் அறமா? என்ற கேள்விகளைக் கேட்க வேண்டும்; ஆனால், எங்களிடம் இதுதொடர்பான கேள்விகளைக் கேட்பது பொருத்தமில்லாதது.

குதிரை பேரம்

அ.தி.மு.கவை டார்கெட் செய்து இப்படிப்பட்ட நகர்வுகள் நடக்கும் போது, அதுகுறித்து அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இதுவரை எந்தவொரு கருத்தும் சொல்லாமல் மௌனம் காப்பது ஏன்?.

குதிரை பேரம் உண்மையாக இருந்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்; கவர்னருக்கு அந்த அதிகாரம் இருந்தால் அவர் உடனடியாக தலையிட வேண்டும். தமிழ்நாட்டு அரசியலில் குதிரை பேரம் என்பது மிக மோசமாக, வெளிப்படையாக நடந்து கொண்டிருக்கிறது என்று பேசப்படுகிறது. அப்படியென்றால் அதில் ஈடுபடுபவர்களை நோக்கி நேரடியாகக் கேள்விகளை எழுப்புங்கள்.

குதிரை பேரத்தில் ஈடுபடுவது த.வெ.க. என்றால் த.வெ.க தலைமையிடமும், தி.மு.க ஈடுபடுகிறது என்றால் தி.மு.க. தலைமையிடமும் நேரடியாகக் கேளுங்கள். இதனால் பாதிக்கப்படும் அ.தி.மு.க தலைமையிடம் போய் கேள்வி எழுப்புங்கள். அதை விடுத்து, இதில் எவ்வித சம்பந்தமும் இல்லாத எங்களைப் போன்றவர்களிடம் தொடர்ந்து கேள்வி எழுப்புவது பொருத்தமற்றது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com