

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன. தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. அதேவேளை, அதிமுக கூட்டணியில் தவெக இணையும் என தகவல் வெளியானது. ஆனால், இந்த தகவலுக்கு இரு தரப்பும் மறுப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், அதிமுக கூட்டணிக்கு விஜய் வந்தால் அவருக்கு லாபம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது,
தவெக உடன் பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை என்பதை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பலமுறை தெளிவுபடுத்திவிட்டார். ஆனால் ஒன்றுமட்டும் விஜய் தெரிந்துகொள்ள வேண்டும். அதிமுக தலைமையை ஏற்று விஜய் எங்கள் கூட்டணிக்கு வந்தால் அவருக்கு லாபம்... இல்லையென்றால் அவருக்கு இழப்பு. வெற்றியாளரா? தோல்வியாளரா? என்பதை விஜய் முடிவெடுக்கட்டும்
என்றார்.