குடிநீர் தொட்டியில் கிடந்த உடும்பு

கடையம் அருகே குடிநீர் தொட்டியில் உடும்பு கிடந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
குடிநீர் தொட்டியில் கிடந்த உடும்பு
Published on

கடையம்:

கடையம் அருகே ஏ.பி.நாடானூர் குமரன் குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலமாக சுற்று வட்டார பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த தொட்டியை சுத்தம் செய்வதற்காக நேற்று பஞ்சாயத்து தலைவர் அழகுத்துரை தலைமையில் ஊழியர்கள் சென்றனர். அப்போது குடிநீர் தொட்டிக்குள் உடும்பு கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து கடையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே வனச்சரகர் கருணாமூர்த்தி உத்தரவின்பேரில், வேட்டை தடுப்பு காவலர்கள் வேல்ராஜ், வேல்முருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்குள் இறங்கி, உடும்பை பத்திரமாக மீட்டனர். பின்னர் அதனை சிவசைலம் பீட் வாளையார் அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com