

சென்னை,
ராமேசுவரத்தை சேர்ந்த 55 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி தூத்துக்குடி தி.மு.க. எம்.பி. கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கருக்கு கனிமொழி அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:-
பாக் ஜலசந்தி கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை பாதுகாப்புடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தை உடனடியாக இலங்கை அரசின் கவனத்துக்கு எடுத்துச்சென்று கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை பாதுகாப்புடன் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.