

சென்னை,
சென்னை ஐகோர்ட்டில், தனியார் அறக்கட்டளை ஒன்று தாக்கல் செய்துள்ள மனுவில், ஆட்டோக்களில் ஜி.பி.எஸ். கருவியுடன் இணைந்த கட்டண மீட்டரை பொருத்தவேண்டும் என்று தமிழக அரசு கடந்த 2013-ம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையின்படி, கடந்த 2014-ம் ஆண்டு சென்னையிலும், பின்னர் தமிழகம் முழுவதும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. 6 ஆண்டுகளாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தாமல் உள்ளது. எனவே, இந்த அரசாணையை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் நேற்று விசாரித்தனர். இந்த திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படாததால் பயணிகள் பாதுகாப்பில் சிக்கல் இருப்பதாகவும், அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை தொடர்வதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.