

குன்னூர்
குன்னூர் பாலக்கிளா அருகே தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரகணக்கான மாணவ -மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளி வளாகம் அருகே சிவசுப்பிரமணியம் (வயது 48) என்பவர் பெட்டிகடை ஒன்றை வைத்து நடத்தி வந்தார். இந்த கடையில் பீடி, சிகரெட் போன்ற புகையிலை பொருட்கள் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதாக பொதுமக்கள் குன்னூர் நகராட்சிக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று குன்னூர் நகராட்சி சுகாதார துறை ஆய்வாளர் மால் முருகன் மற்றும் மேற்பார்வையாளர்கள் குப்புசாமிராஜா ஆகியோர் அந்த கடையில் ஆய்வு செய்தனர். அப்போது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். இதனை போன்று பள்ளி வளாகம் அருகே புகையிலை பொருட்களை விற்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.