

சென்னை,
தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், தமிழக அரசு இந்த ஆண்டு 2 பட்ஜெட்டுகளை சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது. தமிழக அரசு வரலாற்றில் முதன் முறையாக வழக்கமான பட்ஜெட்டோடு, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பாக தனியே ஒரு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை பட்ஜெட்டை விவசாயிகள், விவசாய நிபுணர்கள் மற்றும் விவசாய சங்கங்கள் ஆகியோரை கலந்து ஆலோசித்து விவசாயம் செழிக்கவும், விவசாயிகள் அவர்களது உழைப்பிற்கேற்ற உரிய பயன்களை பெறும் வகையிலும் சிறந்த திட்டங்களை உள்ளடக்கி தயாரிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்களையும், அரசு உயர் அதிகாரிகளையும் அறிவுறுத்தினார்.
மேலும், பொது பட்ஜெட்டை, பொருளாதார மற்றும் நிதிநிலை வல்லுனர்கள், பெருந்தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகள், தொழிலதிபர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகள், வர்த்தக சங்க பிரதிநிதிகள், மீனவர் சங்க பிரதிநிதிகள் ஆகியோரை கலந்து ஆலோசித்து, அவர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளை அடிப்படையாக கொண்டு தமிழ்நாட்டு மக்களின் வாழ்வில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலும், அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையிலும் சிறந்த பட்ஜெட்டை தயாரிக்க அமைச்சர்களையும், அரசு உயர் அதிகாரிகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.