

சென்னை,
கொரோனாவுக்கு எதிரான பேராயுதமாக தடுப்பூசிகள் பார்க்கப்படுகிறது. நம் நாட்டில் கோவேக்ஷின், கோவிஷீல்டு ஆகிய 2 கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. மத்திய அரசு வழங்கும் தடுப்பூசிகள் தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிறப்பு மருத்துவ முகாம்கள், நடமாடும் வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் தனியார் ஆஸ்பத்திரிகளில் கட்டணத்துடன் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இந்தநிலையில் அரசு ஆஸ்பத்திரிகளை போன்று தனியார் ஆஸ்பத்திரிகளில் சி.எஸ்.ஆர். எனப்படும் சமூக பங்களிப்பு நிதி மூலம் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடும் சேவையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை காவேரி மருத்துவமனையில் இந்திய தொழிற் கூட்டமைப்பு மற்றும் தனியார் மருத்துவமனைகள் இணைந்து, தனியார் நிறுவனங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கூட்டாண்மை சமூகப் பங்களிப்பு நிதியின் (சி.எஸ்.ஆர்.) மூலம் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் சேவையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் அவர், தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், இலவச கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிக்கு இந்திய தொழிற் கூட்டமைப்பு தலைவர் டாக்டர் சந்திரகுமார், இந்திய தொழிற் கூட்டமைப்பின் கூட்டாண்மை சமூகப் பங்களிப்பு நிதியிலிருந்து ரூ.2 கோடியே 20 லட்சத்துக்கான காசோலையும், அடையாறு ஆனந்தபவன் சார்பில் அதன் நிர்வாக இயக்குநர் டாக்டர் கே.டி.சீனிவாச ராஜா ரூ.7 லட்சத்துக்கான காசோலையும் வழங்கினர்.
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்குப் பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டியதன் அவசியத்தை முதல்-அமைச்சர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வுப் பணிகளும் அரசின் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநிலத்தில் இதுவரை அரசு மற்றும் தனியார் தடுப்பூசி மையங்களின் மூலம் 2 கோடியே 15 லட்சத்து 17 ஆயிரத்து 446 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் என்.எழிலன், த. வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் டாக்டர் உமா, பெருநகர சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் (சுகாதாரம்) டாக்டர் எஸ். மனீஷ், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சமூக பங்களிப்பு நிதி என்றால் என்ன?
இந்திய கம்பெனிகள் சட்டம் 2013-ன்படி, `ரூ.500 கோடி நிகர மதிப்பு கொண்ட அல்லது ரூ.1,000 கோடி வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள், ஏதாவது ஆண்டில் ரூ.5 கோடியை நிகர லாபமாக ஈட்டியிருக்கும் நிறுவனங்கள் தங்கள் முந்தைய 3 ஆண்டுகள் லாபத்தின் சராசரியில் 2 சதவிகிதத்தை சமூக வளர்ச்சிக்காகச் செலவிட வேண்டும் என்பது கட்டாயம் ஆகும். இவ்வாறு ஒதுக்கப்படும் இந்த நிதி தான் சமூக பங்களிப்பு நிதி என்பது குறிப்பிடத்தக்கது.