

சென்னை,
கொரோனாவுக்கு எதிராக இந்தியாவில் கடந்த மாதம் 16-ந்தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் மற்றும் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனங்களின் கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 14,043 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் 36-வது நாளாக 749 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் ஒரே நாளில் மட்டும் 14 ஆயிரத்து 43 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். அந்தவகையில் 13 ஆயிரத்து 705 பேர் கோவிஷீல்டு தடுப்பு மருந்தும், 338 பேர் கோவேக்சின் தடுப்பு மருந்தும் போட்டுள்ளனர். அதில் 9 ஆயிரத்து 332 பேர் முதல்முறையாகவும், 4 ஆயிரத்து 711 பேர் 2-வது முறையாகவும் தடுப்பூசி போட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 4 லட்சத்து 14 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இதில் 3 லட்சத்து 69 ஆயிரத்து 114 பேருக்கு முதல்முறையாகவும், 45 ஆயிரத்து 594 பேருக்கு இரண்டாவது முறையாகவும் தடுப்பூசி பேடப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.