

சென்னை,
மத்திய கல்வி அமைச்சகத்தின் கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு (யு.டி.ஐ.எஸ்.இ. பிளஸ்) அறிக்கையில், 2025-26-ம் கல்வி யாண்டில் இந்தியா முழுவதும் 5 ஆயிரத்து 663 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் அதிகபட்சமாக மேற்குவங்கத்தில் 4,133 பள்ளிகள் உள்ளன.தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 60 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை. அதேநேரத்தில் இது கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், குறைந்து வருவது ஆறுதல் தரக்கூடிய செய்தியாக இருக்கிறது. கடந்த 2022-23-ம் கல்வியாண்டில் 62 ஆக இருந்த இந்த பள்ளிகளின் எண்ணிக்கை, 2023-24-ல் 490 ஆக உயர்ந்தது. அதன்பின்னர், 2024-25-ல் 311 ஆக குறைந்திருந்தது. தற்போது 60 ஆக சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது ஒருபுறம் இருக்க, ஓராசிரியர் கொண்ட பள்ளிகளின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் உயர்ந்து வருவது அந்த அறிக்கையில் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. 2023-24-ல் ஓராசிரியர் பள்ளிகளின் எண்ணிக்கை 2,758 ஆக இருந்தது. 2024-25-ல் 3.671 ஆகவும், 2025-26-ல் 3,957 ஆகவும் உயர்ந்துள்ளது. 2025-26-ல் ஓராசிரியர் கொண்ட 3,957 பள்ளிகளில் மட்டும் 82 ஆயிரத்து 718 மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள்.