சென்னை புழலில் மனைவியை கொன்று போலீஸ் ஏட்டு தற்கொலை குடும்பத்தகராறில் விபரீத முடிவு

சென்னை புழலில், மனைவியை கொலை செய்துவிட்டு போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை புழலில் மனைவியை கொன்று போலீஸ் ஏட்டு தற்கொலை குடும்பத்தகராறில் விபரீத முடிவு
Published on

செங்குன்றம்,

சென்னையை அடுத்துள்ள புழல் புத்தகரம் திருமால் நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் நரேஷ் (வயது 45).

இவர் புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஜெயஸ்ரீ (40). இவர்களுக்கு 7 வயதில் வருண் என்ற மகன் உள்ளான்.

நரேசுக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று இரவு 10 மணி அளவில் நரேஷ் பணி முடிந்து வீட்டுக்கு வந்தார். அப்போது அவருக்கும், அவரது மனைவி ஜெயஸ்ரீக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதில் ஆத்திரம் அடைந்த நரேஷ், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த ஜெயஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மனைவி இறந்ததை உறுதி செய்த நரேஷ், வீட்டில் உள்ள படுக்கை அறைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்த மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அப்போது தூக்கத்தில் இருந்து எழுந்து வந்த சிறுவன் வருண், தாய் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததையும், தந்தை தூக்கில் பிணமாக தொங்கியதையும் பார்த்து கதறி அழுதான். நீண்ட நேரம் சிறுவனின் அழுகை சத்தம் கேட்டதால் அங்கு அக்கம்பக்கத்தினர் வந்தனர். அப்போது கணவன்-மனைவி இருவரும் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் புழல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com