தொலைதூர கல்வி முறையில் சட்டப்படிப்பு: பதில் அளிக்க பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு அவகாசம் ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை ஐகோர்ட்டில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரை சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
தொலைதூர கல்வி முறையில் சட்டப்படிப்பு: பதில் அளிக்க பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு அவகாசம் ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகம், தொலைதூர கல்வி முறையில் சட்டப்படிப்புகளை நடத்துவது குறித்து விளம்பரம் வெளியிட்டது. இதற்கு தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரை சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

அதில், இந்திய பார் கவுன்சில் அங்கீகாரம் இல்லாமல் தொலைதூர கல்வி மூலம் சட்டப்படிப்பு நடத்தப்படுவதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, தொலைதூர கல்வி மூலம் சட்டப்படிப்புகளை நடத்த அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு தடை விதித்துள்ளது.

இந்தநிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்திய பார் கவுன்சில் தரப்பில், தொலைதூர கல்வியில் சட்டப்படிப்புக்கான வகுப்புகளை நடத்த அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு உரிமையோ, அதிகாரமோ இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டது.

அதேபோல, தொலைதூர கல்வி மூலம் சட்டப்படிப்புகளை நடத்த எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என பல்கலைக்கழக மானியக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து, விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய பல்கலைக்கழகம் மானியக்குழு சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஒரு வாரம் அவகாசம் வழங்கி, விசாரணையை வருகிற 16-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com