

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தனர்.
சென்னை,
சட்டசபையில் த.வெ.க. அரசின் முதல் பொது பட்ஜெட் கடந்த 5-ந்தேதியும், வேளாண்மை பட்ஜெட் 6-ந்தேதியும் தாக்கல் செய்யப்பட்டது. பொது மற்றும் வேளாண்மை பட்ஜெட் மீதான விவாதம் கடந்த 7, 10, 11 ஆகிய 3 நாட்கள் நடைபெற்றது. நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண்மை அமைச்சர் வினோத் ஆகியோர் தங்களது பதிலுரையை கடந்த 12-ந்தேதி வழங்கினார்கள்.
இந்த நிலையில், மானிய கோரிக்கை விவாததின் 2-வது நாள் அமர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று இளைஞர் நலன், விளையாட்டு, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைஷ பொதுப்பணி, மனிதவள மேம்பாட்டுத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வருகிறது. இந்த விவாதத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் அமைச்சர் சரத்குமார் ஆகியோர் பதில் அளித்து பேசுவார்கள். நிறைவாக, துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர்கள் வெளியிடுவார்கள்.
சட்டசபை கூட்டம் தொடங்கியதும் கர்நாடகா வனத்துறையில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக எதிர்கட்சி தலைவர் உதயநிதி, அதிமுகவின் இபிஎஸ், பாமகவின் சௌமியா, பாஜக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். அந்த தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் உரையாற்றினர்.
திமுக சார்பில் எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் பேசியதாவது:- “கர்நாடகாவில் தமிழர்கள் 3 பேர் போலி என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளனர். எங்கே தமிழன் பாதிக்கப்பட்டாலும் முதல்முதலில் குரல்கொடுதவர் எங்கள் தலைவர் (மு.க.ஸ்டாலின்).. 3 பேரை சுட்டுக் கொன்றது மனித உரிமை மீறல்.
வனத்துறையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இது குறித்து தெளிவான நீதி விசாரணை நடைபெற வேண்டும். தமிழ்நாடு அரசு இந்த கொலையை கண்டித்து, கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.
அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். நியாயமான விசாரணை வேண்டும் என்றால் சிபிஐ விசாரித்தால் தான் உண்மை வெளிவரும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் தொடராத வகையில் கர்நாடக அரசுடன் தமிழக அரசு பேச வேண்டும்; கர்நாடகா வழங்கிய ரூ.5 லட்சம் நிதியுதவி மிக குறைவானது; தமிழக அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும்” என்றார்.
இ.கம்யூ எம்.எல்.ஏ ராமச்சந்திரன் பேசுகையில், “கர்நாடாகவில் 3 தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசின் சார்பாக கர்நாடக அரசு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும். இந்த வழக்கில் சிபிஐ விசாரணை தேவை; குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வண்டும்’ என்று கூறினார்.
பாமக எம்.எல்.ஏ. கணேஷ்குமார் கூறியதாவது:- “மாடுகளை தேடி சென்ற தமிழர்கள் என்கவுன்ட்டர். குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும். மான் வேட்டைக்கு சென்றார்கள் என கூறுவது பொய். சிபிஐ விசாரணை வேண்டும்” என்றார்.
கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்பதே தமிழ்நாடு காங்கிரஸின் நிலைப்பாடு என்று எம்.எல்.ஏ. தாரகை கத்பர்ட் கூறினார்.