ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: அருவியில் குளிக்க, பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அருவியில் குளிக்க, பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: அருவியில் குளிக்க, பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு
Published on

பென்னாகரம்,

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக கர்நாடகா மற்றும் கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பியது. இதனால் பாதுகாப்பு கருதி 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 23,471 கனஅடி உபரிநீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. அதன்படி நேற்று மாலை 5 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இந்த நீர்வரத்தை காவிரி நுழைவிடமான தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளந்து கண்காணித்து வருகின்றனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அருவியில் குளிக்கவும், பரிசலு இயக்கவும் விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் அதன் தாக்கம் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி வரை உள்ளது. இதனால் காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய்த்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com