மகளிர் உரிமைத் தொகை உயர்வால் 1.31 கோடி குடும்பங்களுக்கு பயன்: செல்வப்பெருந்தகை

மகளிர் உரிமைத் தொகை உயர்வால் 1.31 கோடி குடும்பங்களுக்கு பயன்: செல்வப்பெருந்தகை

தமிழ்நாட்டில் மக்கள் நலத் திட்டத்தை முடக்க நினைக்கும் மத்திய அரசின் அணுகுமுறையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கடுமையாகக் கண்டிக்கிறது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
Published on

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:

மகளிர் குடும்பத் தலைவர்களுக்கான மாதாந்திர உதவித் தொகை உயர்வு அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால் தமிழ்நாடு முழுவதும் 1.31 கோடி குடும்பங்கள் நேரடியாகப் பயன்பெற உள்ளன.

கடந்த மாதம் தமிழர் திருநாளான பொங்கலை முன்னிட்டு ஒரு குடும்பத்திற்கு ரூ.3,000 வழங்கப்பட்டதும், தற்போது இம்மாதம் மகளிர் உரிமைத் தொகையில் ரூ.5,000 வழங்கப்படுவதாலும், அடுத்தடுத்த மாதங்களில் ஒரு குடும்பம் மொத்தமாக ரூ.8,000 பெறும் நிலையில், குடும்பங்களின் வாழ்க்கையில் உண்மையான மாற்றம் உருவாகியுள்ளது.

விலைவாசி சுமையில் தவிக்கும் ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு இது உண்மையான நிவாரணமாக அமையும். பெண்களின் உழைப்புக்கும், தன்னம்பிக்கைக்கும் கிடைத்த மரியாதையாக இந்த முடிவை பார்க்கிறோம்.

இந்த மக்கள் நலத் திட்டத்தை முடக்க நினைக்கும் மத்திய அரசின் அணுகுமுறையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கடுமையாகக் கண்டிக்கிறது. மாநில உரிமைகளையும் மக்களின் நலனையும் புறக்கணிக்கும் இந்த போக்கை ஏற்க முடியாது.

சமூக நீதியையும் மனிதநேயத்தையும் உறுதி செய்யும் இந்தத் திட்டத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுதியாகக் காக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com