சர்வதேச அளவில் முதலீடுகள் அதிகரிப்பு: தங்கத்தின் விலை மேலும் உயர வாய்ப்பு

தங்கத்திற்கு நிகரான மாற்று முதலீடாக ஒவ்வொரு நாட்டின் கரன்சியும் இல்லை. அதனால் எல்லா நாடுகளும் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றன
சர்வதேச அளவில் முதலீடுகள் அதிகரிப்பு: தங்கத்தின் விலை மேலும் உயர வாய்ப்பு
Published on

சென்னை,

தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிக்கும் என்று தமிழ்நாடு தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க மாநில தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியுள்ளார்.புதிய ஆண்டிலும் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அவர் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:

தங்கத்தின் விலை தினமும் கூடும் என்று சொல்ல முடியாது. ஆனால் ஒட்டுமொத்தமாக உயரக்கூடும். ஒருநாள் கூடினால் மற்றொரு நாள் குறைகிறது. ஆனால் விலை உயர்வுக்கு ஏற்ற அளவில் குறைவதில்லை.ஒட்டுமொத்தமாக பார்த்தால், தற்போது போர் பதற்றம் இல்லாத சூழலிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. பொருளாதார மற்றும் வர்த்தக போரின் காரணமாக உலகளவில் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது.மேலும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியும் தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும்.

சர்வதேச அளவில் பொருளாதார போட்டி அதிகரித்து வருவதால், மற்ற பொருட்களில் முதலீடு செய்வதை விட தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானதாகவும், லாபகரமாகவும் இருப்பதால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது அதிக அளவில் முதலீடு செய்து வருகிறார்கள். இதனால் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.தங்கத்திற்கு நிகரான மாற்று முதலீடாக ஒவ்வொரு நாட்டின் கரன்சியும் இல்லை. அதனால் எல்லா நாடுகளும் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றன.

இதனால் வரும் காலங்களில் தங்கம் பண்டமாற்று பொருளாக மாறவும் வாய்ப்பு உள்ளது.தங்கத்தின் விலை கூடியாலும் வியாபாரம் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. சுபகாரியங்களுக்கு மக்கள் மொத்தமாக வாங்கிச் செல்கிறார்கள். வாங்கும் அளவு குறைந்துள்ளது. தங்கத்தின் விலை உயர்ந்தபோதிலும் மக்களின் தனிநபர் வருமானம் அதிகரித்து பொருளாதாரமும் வளர்ந்து உள்ளது. இதனால் மக்களிடம் வாங்கும் சக்தி கூடியுள்ளது.தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.250 முதல் ரூ.12,500 வரை உயர்ந்து வந்துள்ளதை நான் அறிந்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com