“பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை” : தவறான தகவல் - அமைச்சர் அன்பில் மகேஷ்

பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை என்று வெளியாகும் தகவல் தவறானது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தென்னாப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரான், ஒரே வாரத்தில் உலகின் பெரும்பாலான நாடுகளில் ஒற்றை இலக்க எண்ணிக்கையில் பரவி வருகிறது. தென்னாப்பிரிக்காவின் மருத்துவ ஆய்வு உறுதியாகும் முன்னரே, அவை பல்வேறு நாடுகளுக்குப் பரவியிருப்பதை இது காட்டுகிறது. உருமாற்றம் அடைந்த புதிய கெரோனா வைரஸான பி.1.1.529 என்ற ஒமிக்ரான், தமிழகத்தில் பரவாமல் இருக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன்படி, ஒமிக்ரான் வைரஸ் பரவாமல் இருக்க, 12 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தமிழக அரசு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், தென்னாப்பிரிக்கா, பிரேசில், வங்கதேசம், சீனா, மெரிசியஸ், சிங்கப்பூர் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகள், கூடுதல் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார்கள் என பெது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இந்த சூழலில் ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவிலும் பரவ வாய்ப்பு இருப்பதால் தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்படும் என்ற வதந்தி சமூகவலைதளத்தில் பரவியது.

இந்நிலையில் இதுதொடர்பாக விளக்கமளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ஒமிக்ரான் பரவல் அச்சுறுத்தலால் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை என்று வெளியாகும் தகவல் தவறானது என்று தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com