இலங்கை அரசை இந்தியா எச்சரிக்க வேண்டும் - பிரதமருக்கு டி.ஆர்.பாலு எம்.பி. வேண்டுகோள்

இலங்கை அரசை இந்திய அரசு எச்சரிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு டி.ஆர்.பாலு எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கை அரசை இந்தியா எச்சரிக்க வேண்டும் - பிரதமருக்கு டி.ஆர்.பாலு எம்.பி. வேண்டுகோள்
Published on

சென்னை,

இலங்கை அரசின் மாகாண ஒழிப்பு திட்டம் ஈழத்தமிழர்களின் சுயமரியாதையை பறிக்கும் என நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவரும், அக்கட்சியின் பொருளாளருமான டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஈழத்தமிழர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்கிட, தொடர்ச்சியாகக் கொண்டிருக்கும் அதே உள்நோக்கத்துடன் இலங்கையில் மாகாணங்கள் ஒழிக்கப்படும் என்று இலங்கை அரசு அறிவித்து, அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது கடும் கண்டனத்திற்குரியது.

ராஜபக்சே சகோதரர்கள் புதிதாக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, ஈழத்தமிழர் களின் உரிமைகளை முற்றாகப் பறிக்கும் விதத்திலும் - அவர்களின் சுயமரியாதை மற்றும் கண்ணியத்தைச் சீர்குலைக்கும் விதத்திலும், ஒவ்வொரு நாளும் எடுத்து வரும் நடவடிக்கைகளை மத்திய பா.ஜ.க. அரசும் கண்டுகொள்ளாமல் அமைதி காப்பது மிகுந்த கவலையளிக்கிறது.

மாகாணங்களை ஒழிக்கும் திட்டம், இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவான 13-வது சட்டத்திருத்தத்திற்கு எதிரானது. அந்தச் சட்டத் திருத்தத்தையே அகற்றி விடும் ஆணவம் மிக்க, அக்கிரமமான நடவடிக்கை இது. இந்தியாவுடன் போட்ட ஒப்பந்தமே மதிக்கப்படாமல், கேள்விக்குறியாக்கப்படுகின்ற இந்த நெருக்கடியான நேரத்தில் கூட, நமது வெளியுறவுத்துறை அமைச்சரோ, சமீபத்தில் இலங்கைச் சென்று வந்த தேசியப் பாதுகாப்பு ஆலோசகரோ, ஏன், நம் பிரதமரோ, வாய் திறக்காமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது

தமிழர்களுக்கு அதிகாரம் அளிப்போம், அதுவும் 13-வது திருத்தச் சட்டத்திற்கும் அதிகமான அதிகாரம் அளிப்போம் என்றெல்லாம் பேசிவிட்டு, தற்போது தமிழர்களுக்கென இருக்கின்ற மாகாணங்களையும் ஒழிப்போம் என்பதை, இந்திய அரசு எப்படி, ஏன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது?

ஈழத் தமிழர்களுக்கு தற்போது இருக்கின்ற குறைந்தபட்ச சுய மரியாதையையும் பறிக்கும் இந்த மாகாண ஒழிப்பு திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், அப்படியொரு முடிவு, இந்திய - இலங்கை உறவில் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்குக் கடுமையான எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்றும், தி.மு.க.வின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com