

கொழும்பு,
சமூக வலைதளமான பேஸ்புக் மூலம் இந்தியாவை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவருக்கு, இலங்கையை சேர்ந்த ஒரு சிறுமியுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அந்த சிறுமியை நேரில் சந்திக்க முடிவு செய்த சிறுவன், ராமேஸ்வரத்தில் இருந்து சட்ட விரோதமாக படகில் ஏறி பயணம் செய்துள்ளார். இலங்கை சென்ற சேர்ந்த அந்த சிறுவனை தலைமன்னார் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
ராமேஸ்வரம் தனுஷ்கோடி கடற்பகுதியில் இருந்து எந்தவித பயண ஆவணங்களும் இன்றி படகில் இலங்கை சென்ற அந்த சிறுவன் பயண கட்டணத்திற்காக தனது தங்க சங்கிலியை படகோட்டியிடம் கொடுத்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தலைமன்னார் பகுதியில் வைத்து அடையாளம் காணப்பட்ட சிறுவன் பின்னர் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சிறுவனின் வயதை கருத்தில் கொண்டு அவரை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்க தலைமன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சிறுவனின் தோழியான இலங்கை சிறுமி யார்? இதற்கு பின்னணியில் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.