

சென்னை,
முன்னாள் பா.ஜ.க. தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“தமிழ்நாட்டில் உள்ள 52 முக்கியமான இந்து திருக்கோவில்களில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் செல்போன் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. செல்போனைப் பாதுகாக்க, அதற்கென வைக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் பெட்டகத்தில் ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
கோவில்களில் சினிமா பாடல்களுக்கு ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது தடை செய்யப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், முற்றிலும் செல்போன்களுக்குத் தடை விதிப்பது பக்தர்களுக்குப் பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தும். இந்து கோவில்கள் பரந்து விரிந்தவை. கோவிலில் சுவாமி தரிசனம் முடித்த பிறகு, அங்குள்ள மண்டபங்கள், வளாகங்களில் அமர்ந்து பேசுவது, பிரசாதம் சாப்பிடுவது பக்தர்களின் வழக்கம்.
கோவிலுக்கு குடும்பமாக, உறவினர்களுடன், நண்பர்களாக வருபவர்கள், கோவிலுக்குள் வெவ்வேறு இடங்களில் இருந்தால், அவர்களைத் தொடர்புகொள்ள செல்போன் அவசியம். செல்போன் தடையில் குழுவாக, அதுவும் வயதானவர்களுடன் செல்பவர்களுக்கு சிரமம் ஏற்படும். கோவிலின் கட்டடக் கலை அம்சங்கள், சிற்பங்கள் முன்பு புகைப்படம் எடுப்பார்கள். அது அவர்களுக்கு நினைவாக இருக்கும். சமூக ஊடகங்களிலும் பதிவிடுவார்கள். அதன் மூலம் அக்கோவிலின் கலை அம்சத்தையும், ஆன்மிகச் சிறப்புகளையும் மற்றவர்கள் அறிந்து கொள்ள முடியும். செல்போன் தடையில் இவை அனைத்தும் தடுக்கப்படுகின்றன.
எனவே, கோவில்களில் முழுமையாக செல்போனுக்குத் தடை விதிக்காமல், மூலஸ்தானத்தில் மட்டும் தடை விதிப்பது, மூலஸ்தானத்தை மட்டும் படம் எடுக்கத் தடை விதிப்பது போன்ற கட்டுப்பாடுகளை விதிக்கலாம். மாறாக, செல்போன் கொண்டு செல்லவே தடை விதிப்பது பக்தர்களுக்கு தேவையற்ற மனஉளைச்சலை ஏற்படுத்தும். இதைக் கவனத்தில் கொண்டு இந்து சமய அறநிலையத்துறை செயல்பட வேண்டும்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.