வடதமிழக உள் மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம்

வடதமிழகத்தின் உள் மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

நாடு முழுவதும் அதிகளவு மழை பொழிவை வழங்கும் தென் மேற்கு பருவமழை, கேரளாவில் கடந்த 30-ந்தேதி தொடங்கியது. இதன் காரணமாக, கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.

தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை உள்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது.

சென்னையிலும் கடந்த சில நாட்களாக சுட்டெரித்த கோடை வெப்பம், நேற்று சற்று தணிந்தே காணப்பட்டது. மாலை நேரங்களில் மேகமூட்டங்கள் தென்பட்டன. நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவு பெற்ற 24 மணிநேரத்தில், கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 10 செ.மீட்டர், கடலூர் மாவட்டம் தொழுதூரில் 8 செ.மீட்டர், கோவை மாவட்டம் வால்பாறை, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தலா 6 செ.மீட்டர் மழை பதிவானது.

தென்மேற்கு பருவமழை தீவிரம்

இதற்கிடையே தற்போது, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென்மேற்கு பருவமழை அனைத்து இடங்களிலும் பரவி உள்ளது. வடதமிழக உள் மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், வருகிற 5-ந்தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை

அதேபோல் சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சீபுரம், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வருகிற 5-ந்தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதைத் தொடர்ந்து, ஜூன் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்று வீசும் என்பதால், குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள், தெற்கு அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வஙகக்கடல், வடக்கு அந்தமான் கடல் பகுதி, லட்சத்தீவு பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com