

சின்னசேலம்,
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் கண்ணியத்துடன் வாக்களிக்க அழைப்பிதழ் என்ற வாசகத்துடன் திருமண பத்திரிகை போல் அச்சடித்து பொதுமக்களிடையே வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அந்த அழைப்பிதழில் நிகழும் மங்களகரமான ஸ்ரீவிகாரி வருடம் சித்திரை மாதம் 5-ந் தேதி (18.4.2019) வியாழக்கிழமை சதுர்த்தி திதியும், ஹஸ்தம் நட்சத்திரம், சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இந்திய தேர்தல் ஆணையம் வாக்களிக்கும் வைபோகம் நடத்துகிறது.
அந்தந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் நடைபெறும் இந்த வைபோகத்தில் 18 வயது நிரம்பிய, வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள, தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் சுற்றமும் நட்பும் சூழ வருகைதந்து, தவறாமல் தங்களது வாக்கை பதிவு செய்யும்படி அன்புடன் அழைக்கின்றோம் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், கடைசியில் அன்பளிப்பு பெறுவதும், அளிப்பதும் வாக்களிக்கும் விழாவில் பெரும் குற்றமாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அழைப்பிதழ் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்களிடையே வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த அழைப்பிதழ் பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.