கூட்டணி மாற திட்டமா?: ஆட்சி அதிகாரத்தில் பங்குகேட்டு காங்கிரஸ் காத்திருப்பு - திமுகவின் முடிவு என்ன?

தமிழக சட்டசபை தேர்தலில் இந்த முறை 4 முனைப்போட்டிக்கே அதிகம் வாய்ப்பு இருக்கிறது
சென்னை,
காங்கிரஸ் கட்சி.. நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பும், சுதந்திரம் பெற்ற பிறகும் அசைக்க முடியாத சக்தியாக விளங்கியது. தமிழகத்தில் முதன்முதலாக 1952-ம் ஆண்டு நடந்த சென்னை மாகாணத்துக்கான தேர்தலில் 367 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 152 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
1957-ம் ஆண்டு தேர்தலில் 204 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 151 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. 1962-ம் ஆண்டு தேர்தலில் 206 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 139 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தது.
காமராஜர் தோல்வி
இப்படி 18 ஆண்டுகள் தமிழகத்தில் அசைக்க முடியாத சக்தியாக ஆட்சி அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ் கட்சியை 1967-ம் ஆண்டு தேர்தலில் திமுக தோற்கடித்தது. அந்தத் தேர்தலில்தான் தமிழகத்தில் 234 தொகுதிகள் என வரையறுக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் 232 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியால் 51 தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. முதல்-அமைச்சர் வேட்பாளர் காமராஜரே, மொழிப்போர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் சீனிவாசனிடம் தோல்வி கண்டார். 174 இடங்களில் போட்டியிட்ட திமுக 137 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
அதிமுக வெற்றி
அதன்பிறகு 1971, 1977 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி தொடர் தோல்வியை தழுவியது. 1977 தேர்தலில் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட அதிமுக முதன்முதலில் களம் கண்டு, முதல் தேர்தலிலேயே வெற்றி வாகை சூடியது. எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சர் ஆனார்.
1980-ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த தேர்தலில் திமுக 112 இடங்களிலும், காங்கிரஸ் 114 இடங்களிலும் களம் கண்டது. ஆனால், காங்கிரஸ் 31 இடங்களிலும், திமுக 37 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. 177 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 129 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது.
ஹாட்ரிக் சாதனை
1984-ம் ஆண்டு தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த காங்கிரஸ், 73 தொகுதிகளில் போட்டியிட்டு 61 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைத்தது. ஆனால், எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு 1989-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டது.
திமுக, காங்கிரஸ், ஜெயலலிதா அணி, ஜானகி அணி என 4 முனைப்போட்டி நிலவியது. காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராஜீவ்காந்தி 14 முறை வந்து பிரசாரம் செய்தார். ஆனாலும், 214 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 26 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 12 ஆண்டுகளுக்கு பிறகு திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது.
முதல்-அமைச்சரானார் ஜெயலலிதா
ராஜீவ்காந்தி மரணத்திற்கு பிறகு 1991-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்த காங்கிரஸ் 65 தொகுதிகளில் போட்டியிட்டு 60 இடங்களில் வெற்றி பெற்றது. முதல்முறையாக ஜெயலலிதா முதல்-அமைச்சர் ஆனார். 1996-ம் ஆண்டு தேர்தலிலும் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்தது.
ஆனால், அதிமுக மீதான அதிருப்தியால், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கிய ஜி.கே.மூப்பனார் திமுகவுடன் கூட்டணி அமைத்தார். அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் 64 இடங்களில் போட்டியிட்ட போதிலும் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறமுடியவில்லை. 40 தொகுதிகளில் களம் கண்ட தமாகா 39 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
காங்கிரஸ்-தமாகா இணைந்தது
2001-ம் ஆண்டு அதிமுகவுடன் தமாகா, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே கூட்டணி அமைத்தன. தமாகா 32 இடங்களில் போட்டியிட்டு 23 இடங்களில் வெற்றியும், 14 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 7 இடங்களிலும் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 2006 தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் (தமாகா காங்கிரசில் மீண்டும் இணைந்துவிட்டது) 48 இடங்களில் போட்டியிட்டு 34 இடங்களை கைப்பற்றியது. திமுக ஆட்சி அமைத்தது.
மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர்
2011-ம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணியில் தொடர்ந்த காங்கிரஸ், 63 இடங்களில் போட்டியிட்டு 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 2016 சட்டசபை தேர்தலிலும் திமுக கூட்டணியில் நீடித்த காங்கிரஸ் 41 தொகுதிகளில் போட்டியிட்டு 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த தேர்தலிலும் அதிமுக தொடர் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
2021-ம் ஆண்டு தேர்தலில் அதே திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக வெற்றி பெற்று முதல் முறையாக மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
ராகுல்காந்தி பேச்சு
இந்த நிலையில்தான் அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போது வரை திமுக கூட்டணியில் தொடர்வதாக காங்கிரஸ் கட்சி கூறிவந்தாலும், அக்கட்சியின் தேசிய தலைவர் ராகுல்காந்தி, தவெக தலைவர் விஜய்யுடன் போனில் பேசியது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி, தவெக தலைவர் விஜயை அவருடைய இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பை உறுதி செய்த பிரவீன் சக்கரவர்த்தி, ஆனால் சந்திப்பின்போது பேசியவற்றை வெளியே சொல்ல முடியாது என்று கூறிவிட்டார்.
மாறி.. மாறி.. கூட்டணி
இந்த பரபரப்பும் அடங்கி ஓய்வதற்குள், சமீபத்தில் தமிழகம் வந்த காங்கிரஸ் கட்சி தேசிய செயலாளர் கோபிநாத், 'தமிழகத்தில் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை அழுத்தம் திருத்தமாக வலியுறுத்துகிறோம். இதற்கான குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும்' என்று அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டார்.
தமிழகத்தில் 58 ஆண்டு காலம் ஆட்சி அமைக்க முடியாத நிலையில் உள்ள காங்கிரஸ் கட்சி, 'ஆட்சி அதிகாரத்திலாவது இடம் கேட்போம்' என்ற நிலைக்கு வந்துள்ளது. 1980-ம் ஆண்டு முதல் திமுக, அதிமுக (1989-ம் ஆண்டு நீங்கலாக) என்று மாறி.. மாறி.. கூட்டணி அமைத்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறை தவெக என்ற மாற்று அணி புதிதாக உள்ளது.
ஆட்சியில் பங்கு
எனவே, வாய்ப்பு இருக்கும்போது நாம் ஏன் அமைதியாக இருக்க வேண்டும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்டால் என்ன? என்ற நிலைக்கு காங்கிரஸ் வந்துள்ளது. மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் போதெல்லாம், ஆட்சி அதிகாரத்தில் திமுகவும் இருந்திருக்கிறது. திமுகவை சேர்ந்தவர்கள் மத்திய மந்திரியாக இருந்திருக்கிறார்கள்.
அதுவும் முக்கிய துறைகளை கையில் வைத்திருந்தார்கள். அப்படி இருக்கும்போது, தமிழகத்திலும் திமுக ஆட்சி அமைக்கும்போது காங்கிரஸ் கட்சிக்கும் ஆட்சியில் பங்குதந்தால் என்ன? என்பதுதான் அவர்களது கேள்வி. ஆனால், திமுக இன்னும் தனது முடிவை அறிவிக்கவில்லை.
மதில்மேல் பூனை
தமிழக சட்டசபை தேர்தலில் இந்த முறை 4 முனைப்போட்டிக்கே அதிகம் வாய்ப்பு இருக்கிறது. திமுக அணி, அதிமுக அணி, தவெக அணி, நாம் தமிழர் கட்சி ஆகியவற்றுக்கு இடையேதான் போட்டி. ஆனால், யார் அணியில் யார் இருப்பார்கள் என்பது தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை முடியும்போதுதான் தெரியவரும். அதில், காங்கிரஸ் கட்சியும் விதிவிலக்கல்ல. திமுகவா?, தவெகவா? என்று மதில் மேல் பூனையாக அமர்ந்து காங்கிரஸ் கட்சி யோசித்துக் கொண்டிருக்கிறது.






