"ஊழலற்ற ஆட்சி" வெற்று முழக்கமா? - நயினார் நாகேந்திரன் கேள்வி

'லஞ்சம் இல்லாத தமிழகம்' என்பது வெறும் விளம்பர வாசகம் மட்டுமே என்பதை தவெக அரசு நிரூபித்துள்ளது என்று நயினார் நாகந்திரன் தெரிவித்துள்ளார்.
நயினார் நாகேந்திரன்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

உதட்டளவில் நேர்மை பேசி, உள்ளுக்குள் ஊழல் செய்யும் தவெகவின் நிஜ முகம் தற்போது வெளியாகியிருக்கும் ஒரு வீடியோ மூலம் அம்பலமாகியுள்ளது. மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவரும், தவெக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணைச் செயலாளருமான வீரா, ஒப்பந்ததாரரிடம் ரூ.1.30 லட்சம் லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியாகித் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. முதல்வர் ஒருபுறம் நேர்மை பேச, அவரது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மறுபுறம் லஞ்ச வேட்டையாடி வருவது தவெக அரசின் இரட்டை வேடத்தை அப்பட்டமாகக் காட்டுகிறது.

தன் கட்சியினரின் ஊழலையே தட்டிக்கேட்க முடியாத முதல்வர் விஜய்யால் எப்படி மாநிலத்தை நேர்மையாக வழிநடத்த முடியும்? என்ற கேள்வி எழுகிறது. ஒப்பந்ததாரர்களை மிரட்டி, லஞ்சப் பணத்தை வெளிப்படையாக வாங்கும் தவெக நிர்வாகி வீராவின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. 'லஞ்சம் இல்லாத தமிழகம்' என்பது வெறும் விளம்பர வாசகம் மட்டுமே என்பதை தவெக அரசு நிரூபித்துள்ளது.

எனவே, தவெக நிர்வாகி லஞ்சம் வாங்கியது உண்மையா? என்பதை தீர விசாரித்து, புகார் உண்மையெனில் உடனடியாக உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com