போதைக்கு எதிரான இயக்கம் வெறும் விளம்பரமா? - நயினார் நாகேந்திரன் கேள்வி

போதைப்பொருள் கலாசாரத்தைத் தடுக்க முயன்ற மாணவனின் உயிரை காப்பாற்றத் தவறிய முதல்வர் என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
நயினார் நாகேந்திரன்
கோப்புப்படம்
Published on

சென்னை,

மாணவனை ஆபத்தில் தள்ளிய கல்லூரி நிர்வாகத்தின் மீது காவல்துறை பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கோயம்புத்தூர் ஹிந்துஸ்தான் கல்லூரியில் போதைப்பொருள் புழக்கம் குறித்து நிர்வாகத்திடம் புகார் அளித்த மூன்றாம் ஆண்டு மாணவன் அமுதன், 20 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்ட செய்தி கேட்டு மிகுந்த மனவேதனையும் அதிர்ச்சியும் அடைந்தேன். தம்பி அமுதனை இழந்து வாடும் அவரது பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தன் கல்லூரியில் நடக்கும் போதைப்பொருள் கலாசாரத்தைத் தடுக்க முயன்ற ஒரு மாணவனின் உயிரைக் கூடக் காப்பாற்றத் தவறிய முதல்வர் விஜய்யின் அரசு, எந்த முகத்தை வைத்துக்கொண்டு போதைக்கு எதிரான இயக்கத்தைப் பற்றிப் பேசுகிறது என்ற கேள்வி எழுகிறது. தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் எந்த அளவிற்குப் பெருகியுள்ளது என்பதற்கு இந்த கொடூரச் சம்பவமே சாட்சியாகும்.

எனவே, இந்தக் கொடூரக் கொலையில் தொடர்புடைய நபர்களை உடனடியாகக் கைது செய்வதோடு, புகார் அளித்த விவரத்தை ரகசியமாக வைக்காமல் வெளியிட்டு, அந்த மாணவனை ஆபத்தில் தள்ளிய கல்லூரி நிர்வாகத்தின் மீதும் காவல்துறை பாரபட்சமின்றி மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com